Tuesday, July 24, 2012

நவீன தீண்டாமையாய் நகர மேம்பாடு திட்டம் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களை குறிவைத்து தாக்கி வருகிறது.


அந்த வகையில் சென்னை மக்களின் துப்புரவு பனி தேவை, துணி சலவை பனி தேவை, மின் வேலை பனி தேவை, தண்ணீர் மற்றும் வடிகால் குழாய் பனி தேவை, கட்டிட பனி தேவை,இன்னும் உள்ள அணைத்து பணிவிடை சேவை ( சர்வீஸ் இண்டஸ்ட்ரி) தேவையினை பூர்த்தி செய்து வந்த மக்கள், கூவம் கரையின் ஓரம் குடியேறி வசித்து வந்தனர்.

பக்கிங்கம் கால்வாய் சுத்தம் செய்து நகரத்தை அழகுபடுத்துகிறோம் என , நகரத்தின் அணைத்து தேவைகளையும் நிறைவேற்றி வந்த மக்களை அப்புறபடுத்தி, வேறு இடத்தில குடியமர்த்துகிறோம் என அவர்களை சேர்த்த இடம் தான் பெருங்குடி கண்ணகி நகர்.

சைதாபேட்டையில் இருந்து மாம்பலம் அலுவலகத்திற்கு மாற்றினாலே செல்ல தயங்கி, எப்பாடுபட்டாவது அந்த மாற்றலை ரத்து செய்யும் மனநிலை கொண்ட அதிகாரிகள், பல ஆண்டுகளாக வசித்து வந்த, பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகள் உள்ள மக்களை, அப்புறபடுத்த ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், அவர்களை சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கண்ணகி நகருக்கு மாற்றினார்கள் என்பதைவிட கொண்டுவந்து கொட்டினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த மக்கள் வேலைக்கு சென்று வாங்கும் கூலி கஞ்சிக்கே பற்றாது எனும் போது, அவர்கள் கண்ணகி நகரிலிருந்து பணிக்கு செல்லவும், அவர்களின் பிள்ளைகள் அங்கிருந்து பள்ளிக்கு செல்லும் செலவையும் பற்றி யாருக்கு என்ன கவலை?.பள்ளிக்கு அருகிலேயே இல்லத்தை பார்த்து கொள்வது என்பது, அதிகாரவர்க்கத்தின், ஆதிக்கவாதிகளின், பொருளாதார மேம்பாடு அடைந்தவர்களின் ஒரு அடிப்படை கோட்பாடு, ஆனால் ஒடுக்கப்பட்ட இந்த ஏழை வீட்டு பிள்ளைகள் எத்தனை மைல் கடந்து சென்று படித்தால் என்ன இல்லை இவர்கள் படிக்கதான் வேண்டுமா?.

சிந்தித்து பாருங்கள் சிந்தாதரிபேட்டையில் பள்ளி பயின்று வந்த ஒரு குழந்தை இன்று கண்ணகி நகரிலிருந்து பள்ளி செல்ல எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும், அந்த குழந்தை பள்ளி முடிந்து வீடு வர எத்தனை மணி ஆகும்?.

இப்படி சொல்லி மாளாத துன்பங்களுக்கும் அவதிக்கும் ஆளாகி, அவர்கள் வசிக்கும் கண்ணகி நகர் குடியிருப்பின் நிலை என்ன?.

அந்த பகுதி கண்ணகி நகர் என்று அழைக்கபட்டாலும் கூட, இன்னமும் அங்கு, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மக்கள் குடியிருந்தார்களோ அந்த பகுதியின் பெயர் கொண்ட குடியிருப்புகளாக தனித்தனி பிளாக்குகளாக வசித்து வருகின்றனர்.

அந்த பிளாக்குகளில் அவர்களை குடியேற்றும் போது அவை முடிவடையாத நிலை அதுவும் இல்லாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்பின் அளவு 190 சதுர அடி.முற்று பெறாத குடியிருப்பில் அமர்த்தியதோடு, அந்த பகுதிக்கு என சாலை வசதி இல்லாத நிலையிலும், குடிநீர்வடிகால் வசதிகள் தராத நிலையில், ஒரே வரியில் சொல்வதானால் சராசரி மனிதன் வாழ்வதற்கு உரிய எந்த அடிப்படை சூழலும் இல்லாத நிலையில் மக்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

ஏழை மக்கள் படிக்க தகுந்த பள்ளிகள் கல்லூரிகள் இந்த பகுதியில் இல்லை. சென்னையில் உள்ள எல்லா வகையான மக்களும் எல்லாவிதமான வசதிக்கும் தங்களை ஆட்படுத்தி கொண்டும் அதில் குறைகள் இருந்தால் உடனே சரி செய்தி கொள்வதற்கும் வாய்ப்பு பெற்று உள்ளனர்.

ஆனால் இவையெல்லாம் சாத்தியமாக உழைத்த இந்த மக்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை, இவர்கள் மீது மட்டும் ஏன் அரசின் பார்வை படுவதில்லை, ஆதரவு கை தொடுவதில்லை ஏன் இந்த நவீன தீண்டாமை?.

இவர்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். அந்த வகையில் நேற்று.23 .07 .12 அன்று காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க. விடுதலைச்செழியன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

நான் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்டது தான் இந்த கண்ணகி நகர் அப்போது இந்த மக்களிடம் நான் பேசியது:

"இந்த நிலை மட்டும் அல்ல பொதுவான சமூக நிலை மாற வேண்டுமானால் பொருளாதார மாற்றம் வேண்டும். அப்படிப்பட்ட பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்கு கல்வி நிச்சயம் வேண்டும். அப்படிப்பட்ட கல்வியினை வழங்க இந்த பகுதியில் நல்ல பள்ளிகள், சிறப்பு பாட வகுப்புகள் அமைக்கவும்,இந்த பகுதியில் உள்ள பட்டதாரிகள், இங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்ற வழிவகை செய்யும் வகையில் அவர்களுக்கு சிறப்பு தகுதிகள் பயிற்று மையங்கள் ஏற்படுத்துவேன்" .


பேசி முடித்தவுடன் அவர்கள் கையினை தட்டியதோடு அவர்கள் பனி முடிந்ததை எண்ணிவிட்டனர். அதே கை கொண்டு அளித்த வாக்குகள் இன்றைக்கு அவர்களுக்கு உதவாத நிலையிலும்,


இன்றும் அவர்களுக்காக போராடுவது, முன் நிற்பது, எனை பிரதிநிதியாய் அவர்கள் முன் நிறுத்திய , ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்கான ஒரே தலைவர் மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களின் விடுதலைச் சிறுத்தைகள் தான் என்பதை இனியாவது கருத்தில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment