Monday, September 30, 2013

மக்களவை தேர்தலில் தமிழகத்தின் அணிகள்




எனது இந்த பதிவின் நோக்கம், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகத்தின் அணிகள் எப்படி அமையக்கூடும் என்பதை அலசுவது தான். இதனை நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தின் கருத்தாகவோ, அல்லது நிலையாகவோ நான் நிச்சயம் வெளிபடுத்தவில்லை.

தமிழகத்தின் அரசியல் சூழல் பொதுவாக மற்ற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கு தான் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் நான்காம், அய்ந்தாம் நிலைகளில் உள்ளது. பக்கத்தில் உள்ள ஆந்திராவில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது, கர்நாடகாவில் காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டும் வலிமை, கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதிக்கம், அவ்வளவு ஏன் பாண்டிச்சேரியில் கூட காங்கிரஸ் தாக்கம் அதிகம். இது நாட்டின் தென் பகுதியில் மட்டும் அல்ல, மத்திய, வட இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் ஒன்றுக்கு மேற்பட்டவையின் ஆதிக்கம் நிச்சயம்.

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க ஆகியவை பிரதானமாக இருந்தாலும், அவைகளின் வெற்றி தோல்வி பெருமளவு கூட்டணி கட்சிகளை பொறுத்தே அமையும். இங்கு தேசிய கட்சியான காங்கிரஸ் வாக்கு பலம் இல்லையென்றாலும் அது மாநிலம் முழுதும் அறியப்பட்ட கட்சி, பி.ஜே,பி.யின் நிலை அதுவன்று. அடுத்து வாக்கு வங்கி என வரும் போது அ.தி.மு.க., தி.மு.க அடுத்த நிலையில் காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., வி.சி.க., பா.ம.க., சி.பி.எம், சி.பி.ஐ. ஆகியவை, ம.ம.க., புதிய தமிழகம் பி.ஜே.பி உள்ளிட்ட மற்ற கட்சிகள் அடுத்த நிலையில்.

தேர்தல் முடிவை தீர்மானிக்ககூடிய அம்சங்களில், கட்சிகளின் தற்போதைய நிலையென்ன?

தேசிய அளவிலான பிரச்சனைகள் தமிழக வாக்காளர்களை குறிப்பாக புறநகர் பகுதிகளில் பாதிப்பதில்லை. ஆனால் நிலையான ஆட்சி என்பதற்கு செவி சாய்ப்பார்கள். அதே நேரத்தில் மாநில அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

இன்றைக்கு மக்கள் முன் இருக்கும் விவகாரங்கள் அல்லது தேவைகள் மின்சாரம், பாசனத்திற்கு நீர் அது காவிரி,முல்லை பெரியார், தமிழீழ போராட்டம், மதசார்பின்மை.
  
இதில் தமிழீழ போராட்டத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகள் காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் இடது சாரிகளின் நிலை ஏறக்குறைய ஒன்றே.
இங்குள்ள பிரதான கட்சிகள் அ.தி.மு.க., தி.மு.க கடந்தகாலங்களில் இருந்த நிலையில் சற்று மாற்றி வந்துள்ளது என்றாலும் தமிழ் ஈழம் தான் ஈழ பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு என அறிவிக்க தயக்கம் கொண்டவை.

தமிழ் ஈழம் என வலியுறுத்தும் கட்சிகள் அல்லது வெளிப்படையாக செயல்படும் கட்சிகள் ம.தி.மு.க., வி.சி.க., மட்டுமே. இதில் தேர்தலில் ஈடுபடாத இயக்கங்கள் சார்ந்து நிற்பது ம.தி.மு.க.வுடன்.

மதசார்பின்மை என வரும்போது காங்கிரஸ், இடதுசாரிகள் தேசிய அளவிலும், இங்குள்ள அணைத்து கட்சிகளும் அந்த நிலையில் தான் இருப்பதாக சொல்கின்றனர். இதனை ஏற்பவர்களும், மறுபவர்களும் இருந்தாலும் பி.ஜே.பி மதசார்புள்ள நிலைப்பாடு கொண்ட கட்சி என்பதை அனைவரும் ஏற்று கொள்கிற நிலை.

அ.தி.மு.க மதச்சார்பற்றதாக சொன்னாலும், பி.ஜே.பி. யோடு இணைந்து செயல்படக்கூடிய கட்சிகளில் முதன்மையானதாகும். இன்றைய சூழலில் அ.தி.மு.க., இடதுசாரிகள் ஒன்றாகவும், தி.மு.க. வி.சி.க. ஒன்றாகவும் செயல்பட்டு வருகிறது இந்த அணி காங்கிரஸ் கட்சியோடு முரண்படாமல் இருக்கிறது. தே.மு.தி..க, ம.தி.மு.க, பா.ம.க., ம.ம.க., பி.ஜே.பி. புதிய தமிழகம் ஆகியவை எந்த அணியில் சேரும் ?

தமிழீழ பிரச்சனை இன்றைக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக உள்ளது. இன்னும் குறிப்பாக இந்த பிரச்சனை தமிழீழ விடியல் என்கிற பார்வையில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற நிலையில் அது கூராக்கபட்டு இருக்கிறது. ஆக இந்த காங்கிரஸ் எதிர்பை அ.தி.மு.க. சாதகமாக்கி கொள்ள முயலும்.
அதே வேளையில், அதனை தனது பக்கம் திருப்பி கொள்ள ம.தி.மு.க. காய்களை நகர்த்துகிறது. அதனால் தான் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு, மாணவர்கள் போராட்டத்தை தங்கள் வசபடுத்தி அவர்களுக்கு போரட்ட களத்திற்கு  தேவையான வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்தது என அடுக்கலாம்.
தே.மு.தி.க. காங்கிரஸ் பக்கம் சாய்ந்து, தி.மு.க.வுடன் அணி சேர்வதா அல்லது பி.ஜே.பி. ம.தி.மு.க. அணியில் இடம் பெறுவதா என்கிற குழப்பம்.
தனித்து போட்டி என பறைசாற்றி வரும் பா.ம.க. நிச்சயம் ஒரு கூட்டணியில் இடம்பெறும், அப்படி அவர்கள் இடம் பெறுவது மூன்றாவது அணியில் எனும் போது அவர்களும் மீசையில் மண் ஒட்டவில்லை என கூற வாய்பளிக்கும்.

தி.மு.க. இன்றுவரை காங்கிரஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அது இப்படியே இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஒருபுறம் நாடெங்கிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலையோடு, தமிழ் தேசியவாதிகள் எதிர்ப்பு கருத்துருவாக்கம் உள்ள நிலை நிச்சயம் தி.மு.க. அறியும் எனவே காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்க முன் வரலாம்.

இன்றைய சூழலில் அ.தி.மு.க. அணிக்கு ஒரு பலம், அவர்களது மாநில அரசின் கடமைகளை தவறி இருந்தாலும் அதற்கு காரணம் அந்த அதிகாரங்கள் மத்திய அரசிடம் தான் இருக்கிறது என்றும், நாற்பது ஜெயித்தால் பிரதமர் என்கிற பிரச்சாரமும் ஒரு சாராரிடம் எடுபடும் என்பது உண்மை நிலை. இந்த அணி மேலும் வலிமையுற தமிழ் தேசிய கட்சிகளை இணைக்கும் வாய்ப்புகளை பார்த்து வருகிறது.
எனது தனிப்பட்ட பார்வையில் உருவாகக்கூடிய அணிகள்

                அ.தி.மு.க. தலைமை               தி.மு.க. தலைமை

உள்ளவை        இடது சாரிகள்                         வி.சி.க.

வரக்கூடியவை      ம.தி.மு.க.                   காங்கிரஸ், தே.மு.தி.க.,                                                    புதிய தமிழகம்

ஊசலாட்டம்                     ம.ம.க. பா..ம.க

மூன்றாவது அணி வாய்ப்பு : பி.ஜே.பி., ம.தி.மு.க, பா.ம.க.

இதில் ஒருவேளை தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் இல்லையெனில் (தி.மு.க.,தே.மு.தி.க., வி.சி.க.) மூன்றாவது அணி வலுப்பெறுவது, தி.மு.க.கூட்டணிக்கு நன்மை தரும்.