Saturday, January 26, 2013

மக்கள் விடுதலை --- யுக்திகளும், செயல்முறைகளும்

மதுரை கடலூர் மாவட்டங்களில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையினை தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டித்துள்ளார். இது சாதிய வன்முறையினை வளர்த்தெடுக்கும் ராமதாசின் செயல்களுக்கு துணை போகும் ஒரு நிலை தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பொதுவாக ஒருவரிடம் ஒன்றை எதிர்பார்ப்பது அவரது தன்மையினை அறிந்து, அதனடிப்படையில் தான் எதிர் பார்க்க முடியும். திரு.கருணாநிதியின் அறிக்கை ராமதாசுக்கு அதரவாக பேசியிருக்கும் நிலை, கடந்த காலங்களில் அவரது நிலைப்பாடு பல்வேறு காலகட்டங்களில் அமைந்தது அவரது,அவர் கட்சியின் அரசியல் இலாப கனக்கினையொட்டியே இருக்கும்.

நெருக்கடிநிலையினை (MISA) கடுமையாக எதிர்த்து, “கொடி - திருப்பி பிடித்தால் தடி” என்றதும், இந்திரா காந்தி அம்மையாரை அவரது கட்சி முன்னணியினர் அவர் முன்னிலையிலேயே வசைபாடியதும், சில வருடங்களுக்கு பின் 1980 நடைபெற்ற தேர்தலில் அதே இந்திரா அம்மையாரோடு கூட்டு சேர்ந்து “நேருவின் மகளே வருக ! நிலையான ஆட்சி தருக” என்றார்.

என்னை கொல்ல சதி செய்தார் வைகோ என்றார் பின் அவருடனே கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். பண்டாரம் பரதேசிகள் என விமர்சித்த பி.ஜி.பி. யோடு பின்னாளில் தேர்தல் கூட்டு. இப்படி பல உங்கள் நினைவு சக்கரத்தை சுழற்றினால் கண் முன் வரும். அவர் வசை பாடியவர்களையும்,அவரை வசை பாடியவர்களையும் அவர் தேடிபிடித்து இணைவது அரசியல் இலாப கனக்கினையொட்டியே.

சரி அப்படிப்பட்ட தி.மு.க. வோடு ஏன் கூட்டு?. கருணாநிதி அவர்களோடு ஏன் உறவு ?. அ. தி.மு.க. வோடு அரசியல் உறவு கொள்ளலாமே என்பது நல்ல கேள்வி தான்.

மேற்சொன்ன அரசியல் இலாப கனக்கினையொட்டிய நிலைபாட்டிற்காக தி.மு.க. வை விடுத்து நாடுவது அ. தி.மு.க. என்றால் அவர்கள் இந்த களத்தில் செய்துள்ள சாகசங்கள் கொஞ்சமா ?.

காங்கிரஸ் கட்சியின் மைய அரசு நிர்வாகத்தின் செல்வாக்கோடு, ஜா, ஜெ என இரண்டாக இருந்து பின் இணைந்து, இழந்த இரட்டை இல்லை சின்னத்தை பெற்றார் ஜெயலலிதா அம்மையார். 1991ஆம் ஆண்டு தேர்தலில் இராஜீவ் மரண அலையில் ஆட்சியில் அமர்ந்து இரண்டு வருடங்களிலேயே காங்கிரஸ் கட்சியினை உதறியதும், 1996 சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்கு பின், 1998 பாராளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி யோடுகூட்டு சேர்ந்ததும், அவர்கள் பதவியேற்க கூட்டணி கட்சி கடிதத்தை கொடுக்காமல் வாஜ்பாய் அவர்களை வாட்டியதும் அத்வானி அவர்களுக்கு செலக்டிவ் அம்னிசியா என்றதும் தெரிந்ததே. 1999 பாராளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி. யினை உதறி இனி ஏன் வாழ்நாளில் அவர்களோடு கூட்டணி வைக்கமாட்டேன்என சத்தியமே செய்தார்.

இவையெல்லாம் நினைவிற்கு கொண்டு வருவது, இருபெரும் கட்சிகளின் இயல்பான நிலை இது என்பதும், இந்த நிலையினை அவர்கள் மேற்கொள்வது ஒரு அடிப்படையில் தான் அது அரசியல் இலாப கணக்கு.

அப்படியானால் இவர்கள் இருவரையும் தவிர்த்து அரசியல் அரங்கில் தனித்தே பயணிக்கலாமே ?.

நம்முடைய நெடுந்தூர சமூகப்பயணம் என்பது அரசியல் அதிகாரம் அடைந்து மக்கள் விடுதலை பெறுவது என்பதாகும். அதற்காக மேற்கொள்ள வேண்டிய கட்டாய யுக்திகளும், செயல்முறைகளும் தேவைபடுகின்றது.

பாபர் மசூதியினை இடிப்பதற்கு கரசேவகர்களை அனுப்பிய ஜெயலலிதாவோடு, இஸ்லாமிய இன விரோத, முன்னணி செயல்பாட்டாளர் நரேந்திர மோடிக்கு விருந்து வைத்தும், அவரை தனது நெருங்கிய சக தோழராக பாவிக்கும் ஜெயலலிதாவோடு இஸ்லாமிய இயக்கங்கள் பயணித்து, தேர்தல் களத்தில் ஆதாயம் அடைந்துள்ளனர், அரசியல் அதிகார ஆதாரங்களையும் வென்று வருகின்றனர்.

கடந்தகாலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தடையாக இருந்த, தெரிந்த சக்திகளோடு அரசியல் பயணம் மேற்கொண்டது ஒரு யுக்தி தான்.

இன்றைக்கு கருணாநிதியின் அறிக்கையினை அடுத்து, மேன்மையாளர் தலைவர் எழுச்சித் தமிழரின் அளப்பறியா களப்பணியினை, மறந்தும், மறைத்தும், சிலர் உள்நோக்கோடும், பலர் அறியாமையாலும் அவரின் நிலை என்ன எனும் வினா எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு கீழே இருப்பது எனது சிற்றறிவிற்கு எட்டிய பதில்.

தந்தை பெரியாரை பார்பனர்களுக்கு ஆகாது ஆனால் அவர் படத்தை போட்டு சமூக நீதி காத்த வீராங்கனை என பறைசாற்றி கொள்ளும் ஜெயலலிதாவை, ஒட்டுமொத்த பார்பன சமூகமும் ஆதரிக்கிறது. எத்தனையோ அறிவாளிகள் இருந்தும் வன்னியர் சமூகத்தில் பெரும்பான்மையினர் ராமதாசை ஏற்று அவர் பின் செல்கின்றனர். காரணம் அவர்களுக்கு தெரிகின்றது தங்களது தலைவர் யார் என்பதும், அவர் எங்கிருந்தாலும் தங்களின் தலைவர் என்பதும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர வேண்டும், சாதியற்ற சமூகம் மலர வேண்டும் என உள்ளமும் உறுதியும் கொண்டோர் அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய தலைவர் மேன்மையாளர் எழுச்சித் தமிழர்.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கு அரசியல் அமைப்பு சட்டம் தந்தும், பிற்படுத்தப்பட்டோர், மகளிர் என அனைவருக்கும் போராடிய பாடுபட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை சாதிய வட்டத்திற்குள் இன்றுவரை சமூகம் அடைத்து வைத்து இருப்பது அறியாமையில் அல்ல ஆண்டாண்டு காலமாக மண்ணுக்கு உரியவர்களை மண்ணிலேயே போட்டு மிதித்து அனுபவித்து வரும் தங்களது சுகபோக நிலை மாறக்கூடாது என்பது தான்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும், மேன்மையாளர் எழுச்சித் தமிழரையும் அவர்கள் யாருக்காக போராடுகிறார்களோ அவர்கள் அறிந்ததைவிட அவர்கள் யாரை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவன் எனும் திரைபடத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர்., ஒழுக்க சீலர், கொள்கை நெறிப்பட வாழ்பவர். இருப்பினும் அவர் வில்லன் நம்பியாரோடு கைகோர்பார் , வேறொரு வில்லனிடம் இருந்து விடுபடுவதர்காக. அதன் பின் நம்பியாரோடு கடற்கொள்ளையில் ஈடுபடுவார், அது தன்னை சார்ந்த மக்களை காப்பாற்றுவதற்காகவும், தனது மக்கள் விடுதலைக்கு எதிராக நிற்கும் முதன்மை வில்லனை வீழ்த்த துணை வலிமை வேண்டும் என்பதற்காகவும் தான். இறுதியில் அவர் வெற்றி காண்பார்.

அதே போல் தான் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மை தலைவர் எழுச்சித் தமிழர், மக்கள் விடுதலைக்காக பல்வேறு யுக்திகளை மேற்கொள்கிறார். சமயத்தில் சிலரோடு கைகோர்க்கவும், அவர்களின் செயல்பாட்டோடு இணைவதும் நேர்கிறது.அது எந்த கட்சியாகவும், எந்த தலைவராகவும் இருக்கலாம் . படம் பார்க்கும் மக்கள் நிச்சயம் எம்.ஜி.ஆர். வெல்வார் என்பதை உணர்ந்து படம் பார்த்தது போல், மேன்மையாளர் தலைவர் எழுச்சித் தமிழர் வெல்வார் என்பது திண்ணம் என்பது உணர்ந்து அவர் வழி போராடுவோம்.

No comments:

Post a Comment